web log free
May 18, 2024

`வடமராட்சி களப்பு' அலுவலகத்திற்கு  அமைச்சர் மனோ  விஜயம் 



யாழ் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களும், கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் இன்று (14) முற்பகல் விஜயம் மேற்கொண்டதுடன் செயற்திட்டம் குறித்தும் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் ஆராய்ந்தனர்.   

பொறியியலாளர் திரு குகனேஸ்வரராஜா அவர்களினால் முன்மொழியப்பட்டு பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்த்தன அவர்களினால் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டு இதுவரையும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும்  'வடமராட்சி களப்பு' நன்னீர் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நிதியுதவி வழங்கவேண்டுமென்று கௌரவ ஆளுநர் அவர்கள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களை கேட்டுக்கொண்டதற்கிணங்க கௌரவ அமைச்சர் அவர்கள் தனது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சினூடாக இந்த திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.


இந்த செயற்திட்டம் தொடர்பாக கௌரவ அமைச்சருக்கு தெளிவுபடுத்துவற்கும் செயற்திட்ட பகுதியினை நேரடியாக கண்காணிக்கும் நோக்கிலும் அமைச்சர் அவர்கள் தொண்டமனாறு பகுதியில் அமைந்துள்ள செயற்திட்ட அலுவலகத்திற்கு வருகைதந்ததுடன், அமைச்சர் அவர்களுக்கு இந்த திட்டத்துடன் தொடர்புடைய பொறியியலாளர்கள் விரிவாக தெளிவுபடுத்தினர்.

இந்த திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு தனது அமைச்சினூடாக நிதியினை வழங்குவதுடன் தனது அமைச்சினூடாக இந்த திட்டத்திற்கான முழு நிதியினையும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கௌரவ அமைச்சர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.  

இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆளுநரின் செயலாளர், யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.